Wednesday, 10 February 2021

முத்தமிழ் விழா 2020 - 2021

 

அறிவிப்பும் அழைப்பும்

அன்புடையீர்  வணக்கம்.

மதுரை பாத்திமா கல்லூரி, தமிழ் உயராய்வு மையம் பெருமையுடன் வழங்கும் “முத்தமிழ் விழா” 11.01.2021, 13.02.2021 ஆகிய  இரு நாட்கள் நடைபெற உள்ளன.

நிகழ்வுகள்  Webinar Jam  வழியாக நடைபெறும்.

இணையவழியில் கலைநிகழ்ச்சிகளும், உரையரங்கமும், பயிலரங்கமும் நடைபெற உள்ளன.





பன்னாட்டுக் கருத்தரங்கம் - தற்காலத் தமிழ் இலக்கியங்களின் நோக்கும் போக்கும்

 

பன்னாட்டுக் கருத்தரங்கம்  - 2018

’தற்காலத் தமிழ் இலக்கியங்களின் நோக்கும் போக்கும்’ 

மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக ’தற்காலத் தமிழ் இலக்கியங்களின் நோக்கும் போக்கும்’ எனும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் திசம்பர் 11, 12 ஆகிய இரு தினங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வினை  மதுரை பாத்திமா கல்லூரி, மலாயாப் பல்கலைக்கழகம் மற்றும் சான்லாக்ஸ் பன்னாட்டு ஆய்விதழ் இணைந்து நடத்தியது.

விழாவின் முதல் நாள் (11.12.18) நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் முனைவர் எம்.ஏ.சுசீலா, பேராசிரியர் முனைவர் சு.குமரன் (மலாயாப் பல்கலைக்கழகம், இந்திய ஆய்வியல்துறை), ந.முருகேசபாண்டியன் (முதன்மை ஆசிரியர், சான்லாக்ஸ் பன்னாட்டு ஆய்விதழ்), மற்றும் திரு லக்‌ஷ்மணன் (வெளியீட்டாளர், சான்லாக்ஸ் ஆய்விதழ்) ஆகியோர் பங்கேற்றனர்.

இணைப் பேராசிரியரும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர் க.லதா  வரவேற்புரை நல்கினார். துறைத்தலைவர் முனைவர் ஆ. பாப்பி கமலா பாய் அவர்கள் அறிமுக உரையாற்றினார். அவர்தம் அறிமுக உரையில் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் மையத்தினை எடுத்தியம்பினார். தொடர்ந்து கருத்தரங்கக் கட்டுரைகள் அடங்கிய ஆய்விதழ் மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டது.

கல்லூரிச் செயலர் அருள்சகோதரி முனைவர் பிரான்சிஸ்கோ பிளோரா அவர்கள் ஆசியுரை வழங்கினார். அவர்தம் உரையில், “இக்கால இலக்கியம் மனிதன் வாழ்வைத் தேடித் திரிவதைச் சித்திரிக்கின்றது. கலாச்சாரம் அழிந்து வருவதை உணர்த்தி நிற்கிறது. இதன் நோக்கு  தமிழின் பெருமைகளை நடைமுறைக்குக்  கொண்டு வருகிறது. அதனை நன்முறையில் மாணவர்களுக்கு எடுத்தியம்புகிறது. இக்கருத்தரங்கில் 237 ஆய்வுக்கட்டுரைகள் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். இதன்வழி ஆய்வாளர்களுக்கு இக்கால இலக்கியத்தில் தனிப்பட்ட ஆர்வம் வளர்வதை வெளிப்படுவதை அறியமுடிகிறது” என்றார்.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் அருள்சகோதரி முனைவர் செலின் சகாயமேரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.  ”தமிழ் இணையத் தமிழாய் மூத்த மொழியாய் வலம் வருகிறது. அத்தகு தொன்மையான தமிழ் மொழிக்கு மகுடம் சூட்டுவதாய் அமைகிறது இக்கருத்தரங்கம். மேலும், செம்மொழித்தன்மையையும் தமிழ் மொழியின் சிறப்பினையும் பறைசாற்றும்” என்று கூறினார்.

எழுத்தாளர் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்கள், ’தற்கால இலக்கியமும் மரபு இலக்கியமும் அந்நியமானதல்ல. மரபு இலக்கியத்தில் கால்வைத்துத்தான் தற்கால இலக்கியத்திற்குப் போகமுடியும். பார்வை, போக்கு, மொழி ஆகியன நவீனப்பட்டிருந்தாலும் அடிப்படை பழைய மரபுதான் என்பதை மறுக்க முடியாது’ என்று கருத்துரை வழங்கினார்.

முனைவர் சு.குமரன் சிறப்புரையில்,  “ஒரு ஆய்வாளனுக்குப் புதிய சிந்தனை வளர வேண்டும். ஆய்வில் ஏதாவது ஒன்று புதியதாக இருக்க வேண்டும். பரந்துபட்ட ஆய்வாகவும் அமைய வேண்டும். படைப்பாளனின் நோக்கம் அவனது படைப்பில் நிறைவடைதல் வேண்டும். வாசகன் திருப்தி அடைதல் வேண்டும்”  என்று தற்காலப் படைப்புகள் குறித்தான பதிவுகளை முன்வைத்து உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து முனைவர் க.முருகேசன் அவர்கள், ’தற்பொழுது இணையத்தின்வழி கொண்டாட்டம் மட்டுமே பகிரப்படுகிறது. இனிவரும் ஆய்வுகள் தமிழை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று சிறப்புரையாற்றினார்.

முதல் கருத்தரங்க அமர்வுக்கு திண்டுக்கல், எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர், முனைவர் க. நாகநந்தினி தலைமை தாங்கினார். இரண்டாம் அமர்வுக்கு தியாகராசர் கல்லூரி, இணைப் பேராசிரியர் முனைவர் சு. காந்திதுரை தலைமை வகித்தார். முனைவர் பா.லயோலா ஜூலியட் மேரி நன்றியுரை நல்க, உதவிப் பேராசிரியர் க.ரேவதி தொகுத்து வழங்கினார்.

நிறைவு விழா (12.12.18) சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் சு.வெங்கடேசன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர்), முனைவர் க.முருகேசன் (தமிழ்த்துறைத் தலைவர், கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி) ஆகியோர் பங்கேற்றனர்.

உதவிப் பேராசிரியரும் கருத்தரங்க இணை ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஆ.தேவ் மாலா  வரவேற்புரை நல்கினார். கல்லூரிச்  செயலர் அருட்சகோதரி முனைவர் பிரான்சிஸ்கா பிளோரா அவர்கள் வாழ்த்துரை நல்கினார்.

கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் க.முருகேசன்  அவர்கள் கருத்தரங்கம் சிறப்புடன் நடத்திய பாத்திமா கல்லூரி தமிழ்த்துறைக்குப் பாராட்டுத் தெரிவித்து உரையாற்றினார். திரு சு.லட்சுமணன் அவர்கள் பாராட்டுரை வழங்கினார்.

சு. வெங்கடேசன் அவர்கள் தம் சிறப்புரையில், இலக்கியம் காலந்தோறும் மாறுபட்ட தன்மையுடையது. ஆனால் என்றும் நிலைத்தற்குரியது; மனித மன ஆற்றலை, நுட்பத்தைக் கண்டறியச் செய்வது; தற்காலத் தமிழாய்வுப் போக்குகள் தரமானதாக அமைய வேண்டும்” என்று சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றது. கருத்தரங்க இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.ரேணுகா நன்றியுரை வழங்கினார்.

 கருத்தரங்க அமர்வுகளுக்கு முனைவர் கோ.சுப்பு லெட்சுமி (உதவிப் பேராசிரியர், செந்தமிழ்க் கல்லூரி),முனைவர் மூ.கவிதா (உதவிப் பேராசிரியர், ஸ்ரீ இராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரி), முனைவர் சோ.கி.கல்யாணி (தமிழ்த்துறைத் தலைவர், ஸ்ரீ மீனாட்சி மகளிர் கல்லூரி), முனைவர் ந.விஜய சுந்தரி ( உதவிப் பேராசிரியர், உருமு தனலெட்சுமி கல்லூரி, திருச்சி)  ஆகியோர் தலைமை தாங்கினர். இக்கருத்தரங்கிற்கு, பிறதுறைப் பேராசிரியர்கள்,  தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இலங்கை, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் போன்ற பல பகுதிகளிலிருந்து ஆய்வாளர்கள் கலந்து கொண்டு கட்டுரைகள் வழங்கிச் சிறப்பித்தனர்.

  














 


 


 


 

 

 

 

 

 

 

 

 

Sunday, 30 September 2018

பாத்திமா கல்லூரி, தமிழ் உயராய்வு மையம், பன்னாட்டுக் கருத்தரங்கம் - 2018





பன்னாட்டுக் கருத்தரங்கம் அறிக்கை - 2018
மதுரை பாத்திமா கல்லூரியில்  தமிழ்த்துறை சார்பாக  ’கிறித்தவ இலக்கிய வெளியில் மனித மதிப்பீடுகள்’ எனும் பன்னாட்டுக் கருத்தரங்கம் செப்டம்பர் 28, 29 ஆகிய இரு தினங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முதல் நாள் (28.9.18) நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக  திரு ராஜன் சின்னதுரை (Heart International Ministries, USA), அருள் ஆனந்தர் கல்லூரியின் செயலர்  அருள்தந்தை முனைவர் சி. மணிவளன்  சே.ச மற்றும் திரு விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
உதவிப் பேராசிரியர் முனைவர் சி. அருள் மைக்கேல் செல்வி  வரவேற்புரை நல்க, துறைத்தலைவர் முனைவர் ஆ. பாப்பி கமலா பாய் அவர்கள் அறிமுக உரையாற்றினார். அவர்தம் அறிமுக உரையில், பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் மையத்தினை எடுத்தியம்பினார். தொடர்ந்து கருத்தரங்கக் கட்டுரைகள் அடங்கிய புத்தகம் வெயிடப்பட்டது. நூலினைக் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் செலின் சகாயமேரி வழங்க, சிறப்பு விருந்தினர் திரு ராஜன் செல்லப்பா பெற்றுக்கொண்டார்.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் செலின் சகாயமேரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.  “அன்பு, பணிவு, கருணை போன்ற மனித மாண்புகள் குறைந்து வரும் காலத்தில் இக்கருத்தரங்கம் இவண் நடத்தப்படுவது மிகுந்த மனமகிழ்ச்சியைத் தருகிறது. ஒருவனுடைய அறிவு அவனுடைய நற்செயல் மற்றும் நற்பண்புகளினால் மட்டுமே அமைய வேண்டும். நாமும் வாழ்ந்து பிறரை வாழவைப்பதுதான் வாழ்க்கை. வெற்றியை அடைவது மட்டும் முழுமையான வாழ்க்கையாக அமையாது; கற்றுக்கொள்ளும் விழுமியங்களில் தான் அமையும்” என மாணவர்களுக்கு நல்அறிவுரைகளைக் கூறினார்.
சிறப்பு விருந்தினர் திரு ராஜன் சின்னதுரை பேசுகையில், ’மனிதன் பங்குபெறுகிற கருத்தரங்கிலே மிக முக்கியமானது. கடவுளை நிராகரிக்கும்போது கட்டளைகளை அவமதிக்கும் போது மனிதன் உயிரோடு இருந்தாலும் மறைந்து போனவனாகவே வாழ்கிறான். மனிதனுடைய மதிப்பீடு அளவிட முடியாதது’ என்று கூறினார். அவரைத் தொடர்ந்து அருள்தந்தை முனைவர் சி.மணிவளன் சே.ச அவர்கள், ’தனிமனித மதிப்பீடுகளாக துறவு, தன்னடக்கம் என்ற இரண்டினையும் தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம் இலக்கியங்கள் மூலம் சான்றுகாட்டிப் பேசினார். சமுதாய மதிப்பீடுகளாக அன்பு, ஈகை, சாதி, வினைத்தூய்மை, நிலையாமை’ ஆகியவற்றையும் எடுத்துக் காட்டிக்  கூறினார்.
முதல்நாள் கருத்தரங்க அமர்வுகளுக்கு  டோக் பெருமாட்டி கல்லூரி மேனாள் துறைத்தலைவர், முனைவர் அஞ்சலி அன்னபாய், முனைவர் அருள் அரசு இஸ்ரேல், முனைவர் ஜே. பாத்திமா, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், உதவிப் பேராசிரியர் முனைவர் மோட்சம் ஆனந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
முதல் நாள் நிகழ்வுக்கு முனைவர் சி.அருள் மைக்கேல் செல்வி வரவேற்புரை வழங்க, முனைவர் இரா. ஏஞ்சல் நன்றியுரை நல்கினார். இந்நிகழ்ச்சியை முனைவர் இரா.ஏஞ்சல் மற்றும் திருமதி ஆனி மரிய ஜான்சி இருவரும் தொகுத்து வழங்கினர்.
விழாவின் இரண்டாம் நாள் (29.09.2018) நிகழ்வில் கருத்தரங்கின் அமர்வுத்தலைவர்களாக  முனைவர் செவாலியே எம்.எஸ். காந்திமேரி, முனைவர் சி. அருள் மைக்கேல்  செல்வி ஆகியோர் இருந்தனர்.  
நிறைவு விழா 12.00 மணிஅளவில் நடைபெற்றது. கல்லூரிச் செயலர், அருள்சகோதரி முனைவர் ம.பிரான்சிஸ்கா பிளோரா வாழ்த்துரை வழங்கினார். அவர்தம் சிறப்புரையில், “இக்காலத்தில் மனித நேயம், மதிப்பீடுகள் மறைந்து கொண்டு வருகின்றன. பணி, மனத்தூய்மை, அன்பு, இரக்கம், கருணை ஆகியவற்றை விளக்குவதாய் கிறித்தவ இலக்கியங்கள் அமைகின்றன. பாதிரிமார்களும் தமிழ் இலக்கியங்களுக்குப் பல சேவைகள் செய்துள்ளனர். மேலும், இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்த தமிழ் உயராய்வு மையத்தை  உளமாறப் பாராட்டுகின்றேன்” என்றார்.
சிறப்பு விருந்தினராக மதுரை நொபிலி அருள்பணி மையத்தின் இயக்குநர் அருள்தந்தை முனைவர் மதுரை ஆனந்த் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  அவர் உரையாற்றும் போது, “தமிழுலகுக்கு கிறித்தவ இலக்கியத்தின் பங்கு சிறப்பானது. மனித மதிப்பீடு ஓங்கியிருப்பது கிறித்தவ இலக்கியங்களில்தான். மேலும், ஈகை, பெண்கல்வி போன்ற சிறந்த மதிப்பீடுகளையும் பெற்றுள்ளது. மொழி அழிந்தால் இனம் அழிகிறது. இனம் அழிந்தால் பன்முகத்தன்மை அழிகிறது“ என்றும் மொழி வளரப் பாடுபட வேண்டும்  என்றும் கூறினார். இந்நிகழ்விற்கு முனைவர் இரா.டயானா கிறிஸ்டி  அவர்கள் வரவேற்புரை நல்க, உதவிப் பேராசிரியர் ப.திவ்யா நன்றியுரையாற்றினார். முனைவர் சி. அருள் மைக்கேல் செல்வி அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இக்கருத்தரங்கிற்கு பிறதுறை பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் கட்டுரைகள் வழங்கினர்.  நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் 165க்கும் மேற்பட்டவை. வாஷிங்டன், தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் எனப் பல நாடுகளிலிருந்தும், பாண்டிச்சேரி, சென்னை, தூத்துக்குடி, தேனி, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்தும் வந்த பேராளர்கள் கட்டுரைகளை வழங்கினர்.
மதுரையில் அமெரிக்கன் கல்லூரி, டோக் பெருமாட்டி கல்லூரி, மீனாட்சி கல்லூரி, மீனாட்சி பயோனியர் கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி, மங்கையர்க்கரசி கல்லூரி எனப் பல கல்லூரிகளிலிருந்தும் பேராசிரியர்கள் நேரில் வந்து கலந்து கொண்டனர்.












Thursday, 27 September 2018

International Seminar on Human Values in Christian Literature




பாத்திமா கல்லூரி முத்தமிழ் விழா - வைரவிழாக் கொண்டாட்ட

பாத்திமா கல்லூரி (தன்னாட்சி) மதுரை – 18
முத்தமிழ் விழா
பார்போற்றும் பாத்திமா கல்லூரியில் செப்டம்பர் - 15,16 ஆகிய இருதினங்களில் வைரவிழாக் கொண்டாட்டமாக முத்தமிழ் விழா நடைபெற்றது. இவ்விழாவில் செயலர் முனைவர் அருட்சகோதரி பிரான்சிஸ்கா ப்ளோரா, முதல்வர் முனைவர் அருட்சகோதரி செலின் சகாயமேரி, துணைமுதல்வர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முதல்நாள் நிகழ்வாக உரையரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திருமதி கவிதா ஜவஹர் அவர்கள் “யாதுமாகி நின்றாய் தோழி” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் தமது சிறப்புரையுரையில் ‘பெண் என்பவள் வீரத்தமிழச்சி என்பதை உணர்ந்து,  சாதனை நிகழ்த்தி, வழிகாட்டியாக இருப்பவள் என்றும் ஒரு பெண் தாயாக, மகளாக, சகோதரியாக, தோழியாக அகிலத்தின் அனைத்துமாய் திகழ்பவள் என்றும்’ தனது வீரம் செறிந்த உரையில் மாணவிகளை ஊக்கப்படுத்தினார்.
            அதனைத் தொடர்ந்து முனைவர் செந்தில் அவர்களின் ‘செந்தணல் கலைக்குழு’வினரின் பறையாட்டம், கரகாட்டம், விழிப்புணர்வுப்பாடல் இடம்பெற்றது.  பாத்திமா கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியமும், ஒயிலாட்டமும் இடம்பெற்றது. 

இரண்டாம் நாள் நிகழ்வாக திரைப்படப்புகழ் கலைஞர், ‘நிஜ நாடக இயக்க’ நிறுவனர் முனைவர் இராமசுவாமி அவர்களின் ‘தீதும் நன்றும் பிறர்தரவாரா’ எனும் நிஜநாடகம் அரங்கேற்றப்பட்டது. கருவிகள் மனிதர்களின் பயன்பாட்டிற்கானது, கருவிகளின் பிடிக்குள் மனிதன் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்நாடகம் அமைக்கப்பட்டிருந்தது. அடுத்த நிகழ்வாக பட்டிமன்றப் புகழ் ‘த.ராஜாராம்’ அவர்களின் தலைமையில் ‘பாரதியின் கவிதைக்காடு மணக்க பெரிதும் காரணம் மரபு வேர்களே! புதுமை மலர்களே!’ எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் மரபின் வேர்களே! எனும் தலைப்பில் பேராசிரியை திருமதி சி.எஸ்.விசாலாட்சி, திரு இரா.மாது, அவர்களும், புதுமை மலர்களே! எனும் தலைப்பில் கோ.ரேவதி சுப்புலெட்சுமி, திரு ரெ.இராஜ்குமார் அவர்களும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். பட்டிமன்றத்தின் நிறைவாக பாரதியின் கவிதைக் காட்டிற்கு மணம் சேர்க்க வல்லது புதுமை மலர்களே! என நடுவர் தீர்ப்பு வழங்கினார். இனிதே இந்நிகழ்வு முத்தாய்ப்பாய் முத்தமிழும் சிறப்புற நடந்தேறியது.

Thursday, 23 February 2017

பாத்திமா கல்லூரி சிறுகதை, கவிதை - பயிற்சிப் பட்டறை

படைப்பாக்கத் திறன்
பாத்திமா கல்லூரி, தமிழ் உயராய்வு மையம் 14. 02. 2017 அன்று சிறுகதை, கவிதை -  பயிற்சிப் பட்டறை   நிகழ்த்தியது. மதுரை, அகில இந்திய வானொலி நிலையம், நிகழ்ச்சி பொறுப்பாளர் திரு ஞான சம்பந்தன் என்கிற பூரணக்குமார் சிறப்புரையாற்றி மாணவர்களுக்குப் பயிற்சியும் அளித்தார்.


Wednesday, 22 February 2017




பாத்திமா கல்லூரி (தன்னாட்சி), மதுரை
வீரமாமுனிவா் & இதழியல்  கருத்தரங்கம்
            மேலைநாட்டிலிருந்து தமிழகம் வந்து சமயமும் தமிழும் வளா்த்த வீரமாமுனிவரின் விழாவானது  பாத்திமா கல்லூரியில்  22.02.2017 அன்று நடைபெற்றது. விழா அரங்கில் வைக்கப்பட்டிருந்த வீரமாமுனிவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து விழா தொடங்கியது.
            சான்ஜோஸ் அரங்கில் விளக்கேற்றி இறை வணக்கத்துடன் தொடா்ந்த விழாவில் உதவிப் பேராசிரியா் முனைவா் இரா. டயானா கிறிஸ்டி வரவேற்புரை வழங்கினார். பாத்திமா கல்லூரி முதல்வர் முனைவர் அருள்சகோதரி பாத்திமாமேரி வாழ்த்துரை வழங்கினார். தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி கிறித்துவ ஆய்வு மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர்  முனைவா் அருள்தந்தை சி. மணி வளன் சே.ச அவர்கள்,  ”வீரமாமுனிவரின் உரைநடைத்திறன்” குறித்து சிறப்புரையாற்றினார். தமிழ் உரைநடையின் வளர்ச்சி, அதன் போக்கு, வீரமாமுனிவரின் பங்கு முதலியவற்றை அவர்தம் உரைநடை நூல்கள் வழி விரிவாக விளக்கினார்.  வீரமாமுனிவரின் தமிழ்ப்பணியைப் புரிந்து கொள்ள அவரது உரை வித்திட்டது.
            உதவிப் பேராசிரியர் முனைவர் ச.அருள்மைக்கேல்செல்வி, ”தேம்பாவணி காட்டும் மாண்பு”  என்ற தலைப்பிலும், உதவிப் பேராசிரியர் முனைவர் இரா.பொன்னி, ”சதுரகராதி பதிப்பும் நூற்சிறப்பும்” என்ற தலைப்பிலும் கட்டுரைகள் வழங்கினர். மாணவிகள் பங்கேற்ற தேம்பாவணி மனனப்போட்டி நடைபெற்றது. பாத்திமா கல்லூரி நாடகக் குழுவினர் தேம்பாவணியிலுள்ள இலக்கியக் காட்சியை மையமாகக் கொண்டு நாடகம் நிகழ்த்தினர். உதவிப் பேராசிரியா் திருமதி ஆ. மெர்சி ஏஞ்சலா தொகுத்து வழங்க, முதுகலை இரண்டாமாண்டு தமிழ் மாணவி அருள்சகோதரி சகாயமேரி நன்றி கூறினார்.
இதழியல் கருத்தரங்கம்
            பாத்திமாக் கல்லூரி தமிழ்த்துறை சார்பாக 22.02.2017 அன்று மதியம் இரண்டு மணியளவில் இதழியல் கருத்தரங்கம் நடைபெற்றது. மதுரை அகில இந்திய வானொலி நிலையத்தின் உதவி இயக்குநர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன்  ”ஊடகத் தமிழ்” என்ற தலைப்பில் உரையாற்றினார். உதவிப் பேராசிரியா் முனைவர் ஆ. தேவ்மாலா வரவேற்புரையாற்ற, உதவிப் பேராசிரியா் திருமதி ஆ. மெர்சி ஏஞ்சலா தொகுத்து வழங்கினார்.  கருத்தரங்கை ஒட்டி நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவியருக்கு கல்லூரி செயலர் முனைவர் அருள்சகோதரி பிரான்சிஸ்கா ப்ளோரா அவர்கள் பரிசு வழங்கினார். கல்லூரிகளுக்கு இடையே நடந்த கட்டுரைப் போட்டியில் மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு பயிலும் செல்வி வ. கனக சுந்தரவள்ளி முதல் பரிசும் மதுரை மங்கையர்க்கரசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  இளங்கலை  இரண்டாமாண்டு பயிலும் செல்வி ஜெ. சுந்தரலெட்சுமி இரண்டாம் பரிசும் பெற்றனர். இளங்கலை மூன்றாமாண்டு தமிழ் மாணவி க. சோபிதா நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.